search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் அலையில் சிக்கி"

    திருவனந்தபுரம் அருகே கடல் அலையில் சிக்கி நெல்லையைச் சேர்ந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    திருவனந்தபுரம்:

    நெல்லை அருகே பத்தமடை பள்ளிவாசல் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் அமீது. இவருடைய மனைவி செய்புநிஷா. இவர்களுடைய மகள் பாத்திமா (வயது 9). இவர்கள் உள்பட 11 பேர் ஒரு வேன் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்றனர்.

    விமான நிலையத்தில் ஒருவரை வழியனுப்பி வைத்து விட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு திருவனந்தபுரம் அருகே சங்குமுகம் கடலுக்கு புறப்பட்டனர். சங்குமுகம் கடலில் 11 பேரும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிறுமி பாத்திமா உள்பட 6 பேர் சிக்கி கொண்டனர். இதனால் 6 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் கடலில் இறங்கி 5 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனால் சிறுமி பாத்திமாவை மீட்க முடியவில்லை. கடல் அலை உள்ளே இழுத்து சென்று விட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த வலியத்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் காலை 6 மணியளவில் வெட்டுக்காடு பகுதியில் ஒரு சிறுமியின் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக வலியத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடல் அலையில் சிக்கி மாயமான சிறுமி பாத்திமா தான், கடற்கரையில் பிணமாக கிடந்தது என தெரியவந்தது. தொடர்ந்து பாத்திமாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின் பாத்திமாவின் உடல் நேற்று காலை 11 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பாத்திமாவின் உடலை கட்டிப்பிடித்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    ×